தயாசிறியிடம் ஐந்தரை மணிநேரம் விசாரணை

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று ஐந்தரை மணிநேரம் விசாரணை நடத்தினர்.

அர்ஜூன் அலோசியசின் பேர்ச்சுவல் ரெசரிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான, வோல்ட் அன் றோ அசோசியேட் நிறுவனத்திடம் இருந்து, ஒரு மில்லியன் ரூபா பெற்றுக் கொண்டமை தொடர்பாகவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் நேற்றுக்காலை முன்னிலையான தயாசிறி ஜெயசேகரவிடம் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டன.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட தயாசிறி ஜெயசேகர,

“ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக என்னிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கூறினேன்.

இயல்பான முறையில் இந்த விசாரணை இடம்பெற்றது, வரும் நாட்களில், பேர்ச்சுவல் ரெசரிஸ் நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொண்ட பலர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவர்” என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!