குடத்தனை சம்பவம் – அனைவரையும் கைது செய்வோம் என பொலிஸ் எச்சரிக்கை!

யாழ்ப்பாணம்- குடத்தனை, மாளிகை திடல் பகுதியில் தமது நடவடிக்கைக்கு இடையூறாக செயற்பட்ட பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்யவுள்ளதாக பொலிசார் எச்சரித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், ஊடகம் ஒன்றுக்கு விளக்கமளித்துள்ளார்.

“பொலிஸாரால் எவரும் தாக்கப்படவில்லை. அந்த பகுதியில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக எமக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து குறித்த பகுதியில் நேற்றுமுன்தினம் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது லொறி ஒன்று அடையாளம் காணப்பட்டது.

அந்த லொறியை எடுத்து வருவதற்கு அப்பகுதி மக்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால், லொறியை கொண்டு வருவதற்கு எமது குழுவினரால் முடியவில்லை.

நேற்று லொறியை கொண்டு வருவதற்கு சென்ற போது, லொறிக்கான அனுமதி பத்திரங்களை இல்லை என அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். இதன் போது மற்றுமொருவரை லொறியின் உரிமையாளர் என சிலர் குறிப்பிட்டனர். இந்தநிலையில் அவரை கைது செய்வதற்கு முற்பட்ட போது, அங்குள்ள சில பெண்கள் அதற்கு தடையாக செயற்பட்டு அவரை காப்பாற்றினார்கள்.

இதனால் அவரை நேற்று கைது செய்ய முடியாமல் போனது. இதனையடுத்து அங்குள்ள மூன்று பெண்களை கைது செய்வதற்கு பொலிசார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எமது தரப்பு அனைத்தையும் காணொளி எடுத்து வைத்துள்ளது. அங்கு பொலிசாரின் கடமைக்கு இடையூறாக செயற்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். பொலிசாரின் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதன்போது பொலிசாரால் எவரும் தாக்கப்படவில்லை என்றும், அனைத்து விடயங்களையும் தாங்கள் காணொளி எடுத்து வைத்துள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!