யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதியால் பரபரப்பு!

யாழ்ப்பாணம்- சிறைச்சாலையில் உயிரை மாய்க்க முயற்சித்த போதைப்பொருள் சந்தேக நபர் ஒருவர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தப்பிச் சென்ற சம்பவத்தினால் நேற்று அதிகாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் உள்ள சந்தேக நபரே தப்பிச் சென்றவராவார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் சந்தேக நபர் நேற்றுமுன்தினம் தூக்கிட்டு உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். அதனைக் கண்ட சிறை உத்தியோகத்தர்கள் தடுத்துள்ளனர்.

எனினும் சந்தேக நபர் மூச்சடங்கிய நிலையில் காணப்பட்டதால் உடனடியாகவே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் சேர்க்கப்பட்டார்.

போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பை மீறி சந்தேக நபர் தப்பித்துள்ளார். அங்கிருந்து சென்று அண்மையிலுள்ள கூலர் நிறுவனத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாடகை படி வாகனத்தை எடுத்துக் கொண்டு சந்தேக நபர் தப்பித்துள்ளார்.

அந்த வாகனத்தில் உள்ள இலக்கத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வாகன உரிமையாளரால் அறிவிக்கப்பட்டது.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் அந்த படி வாகனத்தை கல்வியங்காடு பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸார் மீட்டெடுத்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்த நிலையில் சந்தேக நபர் மீளவும் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தில் சந்தேக நபரால் எடுத்துச் செல்லப்பட்ட படி வாகனம் இன்று நீதிமன்றில் ஒப்படைக்ககப்படும் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!