கொரோனா ஊரடங்கு: கணவன் சத்தியத்தை மீறியதால் மகளுடன் தற்கொலை செய்துகொண்ட மனைவி!

கொரோனாவை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 40 நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் மது கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு தளர்த்திய நிபந்தனைகளின்படி ஆந்திராவில் அனைத்து மதுக்கடைகளும் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேர் கிட்டண்னாகபுரத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 50), இவரது மனைவி ஜெகதம்மா (40), இவர்களது மகள் நந்தினி (20), மது பழக்கம் கொண்ட சொக்கலிங்கம் ஊரடங்கால் கடந்த 40 நாட்களுக்கு மேலாக மது குடிக்காமல் தனது குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருந்து வந்தார்.

அப்போது மனைவி, மகள் கேட்டுக் கொண்டதால் இனி மது அருந்த மாட்டேன் என்று சத்தியம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஊரடங்கிற்கு பிறகு முதல்முறையாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் சொக்கலிங்கத்துக்கு மது குடிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. கொடுத்த சத்தியத்தை மீறி சொக்கலிங்கம் மது குடித்து விட்டு வீட்டிற்கு சென்றார்.

அப்போது மனைவி, மகள் இருவரும் அவரை தட்டி கேட்டனர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த ஜெகதம்மா மகள் நந்தினியுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தியத்தை மீறி கணவன் மது குடித்ததால் மகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலமனேர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!