மே 18 இரவு 7 மணிக்கு வீடுகளில் தீபங்கள் ஏற்றி நினைவுகூர அழைப்பு!

எதிர்வரும், மே 18ஆம் திகதி இரவு 7 மணிக்கு வீடுகளில் தீபங்கள் ஏற்றி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூருமாறு , தமிழ் சிவில் சமூக அமையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ தமிழினப் படுகொலையின் 11ஆவது நினைவு நாளை தமிழ் தேசம் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி அனுட்டிக்கவுள்ளது.

ஆழமாகி வரும் இராணுவ மயமாக்கல், அச்சுறுத்தும் கொரோனோவுக்கு மத்தியில் நாம் இம்முறை இந்த நினைவு நாளை அணுக வேண்டியுள்ளது.

பொறுப்புக்கூறல் போராட்டம் இந்தத் தலைமுறையோடு முடிவடையாது என்பதும் தலைமுறை கடந்ததாக அமையும் என்பதும் எமக்கு கடந்த வருடம் உணர்த்திய பாடங்கள். நீண்ட, தலைமுறை கடந்த நீதிக்கான போராட்டத்துக்கான நிறுவனம் சார் ஏற்பாடுகளையும் கட்டமைப்பு சார் செயற்பாடுகளையும் நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த போராட்டத்திற்கு தேவையான கூட்டு உள வலிமையையும் ஓர்மத்தையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். முள்ளிவாய்க்கால் அவலத்திற்குப் பின் பிறந்த ஒரு தலைமுறை எமது தாயகத்தில் வளர்ந்து வருகின்றது.

அந்த தலைமுறைக்கு எமது தேசத்தின் வரலாற்றையும் போராட்டத்தின் வரலாற்றையும் நாம் அனுபவித்த அனுபவிக்கும் ஒடுக்குமுறையையும் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அந்த ஒடுக்குமுறையோடு வாழப் பழகாதிருக்க, அவ்வொடுக்குமுறையிலிருந்து அவர்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிவகைகளை நாம் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அவ்வாறான தற்காப்பு பொறிமுறைகளில் ஒன்று தான் நினைவேந்தல்களை முறையாக ஒழுங்கமைத்துக் கொள்வதாகும்.

அந்த வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினால் ஏலவே கோரப்பட்டுள்ளவாறு இந்த முறை நாம் நினைவேந்தலை எமது இல்லங்களில் இருந்து ஆரம்பிப்போம்.

பின்வரும் மூன்று செயற்பாடுகளில் தாயகத்திலும் புலத்திலும் உள்ள அனைவரும் இணைந்து கொள்ளவேண்டும் என அன்புரிமையுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவோடு இணைந்து கேட்டுக் கொள்கின்றோம். மே 18 அன்று இரவு 7 மணிக்கு வீடுகளில் தீபங்கள் ஏற்றி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர வேண்டும்.

மே 18, அன்று எமது மக்கள் போரின் இறுதி நாள்களில் உட்கொண்ட கஞ்சியை அன்றைய தினம் ஒரு வேளையேனும் உணவாகாராமாக்கிக் கொள்ள வேண்டும். மே 18, அன்று இரவு 7 மணிக்கு அனைத்து வணக்கத்தலங்களிலும் சிறப்பு மணி ஒலி எழுப்பி பேரவலத்தை நினைவேந்தல் செய்ய வேண்டும்.

இத்தகைய செயற்பாடுகள் நினைவேந்தலை சமூக மயப்படுத்த உதவும் என நாம் நம்புகிறோம். எமக்குள் என்றும் நீங்கா அந்த நினைவு விளக்கை தூண்டி விட அனைவரும் கரம் கோர்ப்போம்” என்றும் தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!