பிரான்சில் தலைதூக்கும் விசித்திர நோய்: பலியான முதல் சிறுவன்!

லண்டன், நியூயார்க் போன்று பிரான்சில் கொரோனா தொடர்பான விசித்திர நோய்க்கு முதல் சிறுவன் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில், மத்திய தரைக்கடல் துறைமுக நகரமான மார்சேயில் உள்ள லா டிமோன் மருத்துவமனையில் சிறார் தீவிர சிகிச்சை பிரிவின் தலைவர் ஃபேப்ரிஸ் மைக்கேல் தெரிவிக்கையில், மாரடைப்பு தொடர்பான நரம்பு மண்டல காயம் காரணமாகவே 9 வயதேயான சிறுவன் இறந்ததாக தெரிவித்துள்ளார்.

கொரோனா உறுதி செய்யப்பட்டு, 7 நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த சிறுவன் சனிக்கிழமை இறந்ததாக மருத்துவர் ஃபேப்ரிஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார். கடந்த 3 வாரங்களாக பல நாடுகளில் சிறார்கள் கொரோனா தொடர்பான இந்த விசித்திர நோயால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. லண்டனில் 14 வயது சிறுவன், இதுபோன்ற விசித்திர நோய்ய்க்கு மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நியூயார்க்கில் இதே விவகாரம் தொடர்பில் செவ்வாயனறு பேசிய ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ, மாநிலத்தில் மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதாகவும், 100 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் மார்ச் 1 முதல் மே 12 வரை பிரான்சில் இதுபோன்று பாதிப்புக்கு உள்ளான 14 வயதுக்கு உட்பட்ட 125 சிறார்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக நாட்டின் பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!