“கல்யாணம் பண்ணா பிரிஞ்சிடுவோமே”… 2 வயது குழந்தையை ‘தவிக்க’ விட்டு… ‘தோழியுடன்’ தற்கொலை!

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவருக்கு ஜோதி(23) என்ன பெண்ணுடன் திருமணம் நடைபெற்று இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் தனது கணவரை பிரிந்த ஜோதி, தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஜோதியின் பெற்றோர்கள் கடந்த ஆறு மாதங்களாக கேரளாவில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

ஜோதி தனது வீட்டின் அருகேயுள்ள தறிபட்டறை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே பட்டறையில் பிரியா (20) என்பவரும் ஜோதியுடன் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது இருவரும் இணைபிரியாத தோழிகளாக பழகி வந்தனர். வெளியில் எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வருவது, எப்போதும் ஒன்றாக இருப்பது என மிக நெருக்கமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், வரும் 27 ஆம் தேதியன்று பிரியாவுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. திருமணம் செய்து வேறு வீட்டிற்கு சென்றால் நெருங்கிய தோழியான ஜோதியை பிரிந்து விடுவோம் என்பதை எண்ணி பிரியா அதிகம் மன வேதனையில் இருந்ததாக தெரிந்தது. இதனையடுத்து, தோழியைக் காண வேண்டி சைக்கிளை எடுத்துக்கொண்டு ஜோதி வீட்டிற்கு பிரியா புறப்பட்டுள்ளார்.

அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் ஓரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். வெகு நேரமாகியும் மகள் பிரியா வீடு திரும்பாத நிலையில் ஜோதியின் வீட்டிற்கு பிரியாவின் தாய் சென்ற போது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, மகள் தற்கொலை செய்து கொண்டதை கண்டு பிரியாவின் தாயார் கதறி அழுதுள்ளார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!