இலங்கைக்கு கிடைத்த சிறந்த சந்தர்ப்பம். சந்தோசத்தில் அரசு.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள ஸ்ரீலங்கா ஏற்றுமதித் துறைக்கு தற்போது புதிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பிற்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு அதிக அளவிலான வர்த்தக கட்டளைகள் பெறப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் பிரபாஷ் சுபசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார்.

கிடைக்கப்பட்ட வர்த்தக கட்டளைகளை துரிதகதியில் மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் ஏற்றுமதியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேபோல, விவசாய மற்றும் பதனிடப்பட்ட உணவு பொருட்களுக்கும் புதிய வர்த்தக கட்டளைகள் கிடைக்கப்பட்டுள்ளன.

இது தவிர, மருத்துவ, மற்றும் சத்திர சிகிச்சை கையுறைகள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு போதிய அளவு ஏற்றுமதி உத்தரவுகள் கிடைத்துள்ளன.

அப்படியான பொருட்களை உற்பத்தி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு இந்த வருட இறுதி வரை சிறந்த வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக தைக்கப்பட்ட ஆடை உற்பத்தி ஏற்றுமதி இலக்கு தற்போது 40 சத வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலை காரணமாக இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!