கொரோனா சிகிச்சைக்கு உகந்ததாக அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து!

உலகம் முழுவதும் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலைஅடுத்து 3 வது இடத்தில் ரஷியா உள்ளது. அங்கு தொற்று எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி உள்ளது. தற்போது கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷியா அறிவித்துள்ளது. அவிஃபாவிர் (Avifavir)என்ற இந்த மருந்து நாட்டின பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் என ரஷிய அரசு இன்று தெரிவித்துள்ளது. ரஷ்ய அரசின் 50 சதவீத முதலீடு உள்ள கெம்ரார் (ChemRar) என்ற நிறுவனம் இந்த புதிய மருந்தை தயாரித்து உள்ளது.

நாட்டில் வைரஸ் தொற்று அதிகரிப்பதால், மிகவும் குறைந்த சமயத்தில், சோதனைகள் நடந்து வரும் நிலையிலேயே இந்த மருந்துக்கு ரஷிய சுகாதார அமைச்சகம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் மற்றும் கெம்ரார் குழுமம் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் தொகுதி அவிஃபாவிர் மருந்தை ரஷ்ய மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளதாக ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாதந்தோறும் 60000 பேருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும், 10 நாடுகள் இந்த மருந்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷிய மருந்து கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

ரஷியா முழுவதும் இந்த மருந்துக்கு அதிக தேவை உள்ளது, நாட்டின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளுக்கும் டெலிவரி ஏற்பாடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.மருத்துவ பரிசோதனைகளின் ஆரம்ப முடிவுகள் இந்த மருந்தை உலகில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒன்றாக ஆக்குகின்றன,என ரஷிய மருந்து கட்டுப்பாட்டுத் துறை தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் கூறி உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!