துரோகி நவீனை தலைவராக்கியது மலையக மக்களை அவமானப்படுத்தும் செயல்!

நாமும் பங்களியாகி உருவாக்கிய நல்லாட்சியில் பெருந்தோட்ட அமைச்சராக இருந்து, பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபாய் சம்பள விடயத்தில், தடையாக இருந்து துரோகம் செய்த நவீன் திஸாநாயக்கவை ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவராக நியமித்து மலையக மக்களை ரணில் விக்ரமசிங்க அவமானப்படுத்தியுள்ளளார்’

இவ்வாறு முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும்,

‘நவீன் துரோகம் செய்ததை நாடு அறியும், இவருக்கு தனது கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் பதவி வழங்கியதன் மூலம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்தில் நவீனுக்கு உடந்தையாக தானும் இருந்துள்ளதை வெட்கமில்லாமல் வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் தனது முன்னாள் பிரதமர் பதவிக்கு உத்தரவாதம் வழங்கி, ஆட்சி அமைக்க பெருவாரியாக வாக்களித்த மலையக மக்களை, இதன்மூலம் ரணில் விக்ரமசிங்க அவமானப்படுத்தி உள்ளார்.

ஐதேக கட்சி நியமனங்கள் எங்களுக்கு தேவையற்ற விடயம். அதையிட்டு அக்கறை கொள்ள எங்களுக்கு நேரமும் கிடையாது. ஆனால், முன்னாள் பிரதமர் ரணிலுக்கு ஆட்சி அமைக்க அதிகம் வாக்களித்தது, தமிழ் மக்கள் என்பதை அவர் மறக்க கூடாது. அதிலும் அதிகபட்ச வாக்குகளை தந்த மாவட்டம், நுவரெலியா மாவட்டம் என்பதையும் அவர் மறக்க கூடாது. அவர் மறந்தாலும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நவீன் திசாநாயக்கா மறக்க கூடாது.

பெருந்தோட்டத்துறை அமைச்சராக இருந்து, தோட்ட கம்பனிகளின் ஏஜண்டாக செயற்பட்டு, தமிழ் தோட்டத்தொழிலாளர் சம்பள விவகாரத்தில், பெருந்தடையாக இருந்து துரோகம் செய்தவர் இந்த நவீன். இது மட்டுமல்ல. தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடமைக்க, காணி தருவதிலும் நவீன் திசாநாயக்க பெரும் தடைகளை ஏற்படுத்தினார். அரசாங்கத்துக்குள் சண்டையிட்டே இந்த காணிகளை நாம் பெற்று வீடமைப்பு திட்டங்களை முன்னெடுத்தோம்.

நவீன் திசாநாயக்க எவருக்கு துரோகம் செய்தாரோ, அதே அவர்களின் தொழிற்சங்க தலைவராக அவரையே வெக்கமில்லாயல் நியமித்துள்ளனர். இதன்மூலம் முன்னாள் ரணில் விக்ரமசிங்க, தமிழ் மக்களை முட்டாளாக்க நினைக்கிறார். இது நடக்காது. தமிழ் மக்களிடம் தனக்கு எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும், ரணில் விக்ரமசிங்க முற்றாக இழக்கிறார்.’ – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!