தமிழகத்தில் அசுர வேகமெடுக்கும் கொரோனா: ஒரே நாளில் 3,645 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,645 பேரை கொரோனா தாக்கியது. பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கியது. கர்ப்பிணி உள்பட 46 பேர் நேற்று உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா நாள்தோறும் புதிய உச்சத்தை தொடுகிறது.இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 3 ஆயிரத்து 523 பேர், வெளிநாடுகளில் இருந்து வந்த 26 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 96 பேர் என மொத்தம் 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 2 ஆயிரத்து 211 ஆண்களும், 1,434 பெண்களுக்கும் அடங்குவர்.இதில் 12 வயதுக்கு உட்பட்ட 152 குழந்தைகளும் இடம் பெற்றுள்ளனர். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 74 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று சென்னையில் 37 பேர், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 3 பேர், மதுரையில் 2 பேர், விருதுநகரில் ஒருவர் என 46 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதில் 44 பேர் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பிடியில் சிக்கியதால் உயிரிழந்து உள்ளனர். 2 பேர் கொரோனா தாக்குதலில் சிக்கி இறந்து உள்ளனர். விருதுநகரில் 34 வயது கர்ப்பிணி பெண் கடந்த 23-ந்தேதி உடல்நிலை சரி இல்லாத நிலையில் மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர், கடந்த 24-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருந்தது நேற்று உறுதியானது. தமிழகத்தில் நேற்று உயிரிழந்தவர்களில் 31 பேர் அரசு மருத்துவமனையிலும், 15 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து நேற்று 1,358 மீண்டனர். இதுவரையில் 41 ஆயிரத்து 357 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சிகிச்சையில் 32 ஆயிரத்து 305 பேர் உள்ளனர்.

நேற்று 36 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் சென்னையில் 1,956 பேரும், செங்கல்பட்டில் 232 பேரும், மதுரையில் 194 பேரும், திருவள்ளூரில் 177 பேரும், வேலூரில் 149 பேரும், சேலத்தில் 111 பேரும், காஞ்சீபுரத்தில் 90 பேரும், ராமநாதபுரத்தில் 72 பேரும், திருவண்ணாமலையில் 70 பேரும், கள்ளக்குறிச்சியில் 58 பேரும், ராணிப்பேட்டையில் 53 பேரும், கோவையில் 43 பேரும், தேனியில் 40 பேரும், தூத்துக்குடியில் 37 பேரும், விருதுநகரில் 33 பேரும், திருச்சியில் 32 பேரும், கன்னியாகுமரியில் 28 பேரும், தஞ்சாவூரில் 25 பேரும், நெல்லையில் 19 பேரும், திருவாரூரில் 18 பேரும், விழுப்புரம், நாகப்பட்டினம், கடலூரில் தலா 17 பேரும், திருப்பூர், கிருஷ்ணகிரியில் தலா 14 பேரும், தென்காசியில் 12 பேரும், புதுக்கோட்டையில் 10 பேரும், நீலகிரி, சிவகங்கையில் தலா 7 பேரும், தர்மபுரி, ஈரோடு, நாமக்கலில் தலா 6 பேரும், அரியலூர், திருப்பத்தூரில் தலா 4 பேரும், திண்டுக்கல், கரூரில் தலா இருவரும் அடங்குவர்.

தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 3 ஆயிரத்து 633 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 350 பேரும், வெளிமாநிலத்தில் இருந்து விமானம் மூலம் வந்த 258 பேரும், ரெயில் மூலம் வந்த 402 பேரும், சாலை மார்க்கமாக வந்த 1,985 பேரும், கடல் மார்க்கமாக வந்த 14 பேர் என மொத்தம் 3 ஆயிரத்து 9 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 33 ஆயிரத்து 675 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 10 லட்சத்து 42 ஆயிரத்து 649 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!