பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலுள்ள 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை கைதிகளாக உள்ளனர்.

கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை இந்திய ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படியே இந்த விவகாரத்தில் அவர் முடிவெடுக்க முடியும் என்பதால், உள்துறை 7 பேரின் விடுதலை கூடாது என அறிவுறுத்தி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் கோரிக்கையில் இந்திய மத்திய அரசு ஒத்துப்போகவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. “உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரிலே இந்திய ஜனாதிபதி மனுவை நிராகரித்துள்ளார். முன்னாள் பிரதமர் கொலைக்குற்றவாளிகள் எந்த சூழலிலும் சுதந்திரமாக நடமாட முடியாது” என உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!