மோடி அரசுதான் என் மரணத்திற்கு காரணம் – கடிதம் எழுதி வைத்து விவசாயி தற்கொலை

மோடி அரசுதான் என் மரணத்திற்கு காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டம் ரஜுர்வாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் பாவோ ராவ் சாயாரே.

55 வயதான விவசாயியான இவர் தனது நிலத்தில் பருத்தி மற்றும் இதர பயிர்களை விளைவித்து இருந்தார். பூச்சிக்கடியால் பயிர்கள் நாசம் அடைந்து கடுமையான நஷ்டம் ஏற்பட்டது.

அவர் கடன் வாங்கி பயிர் செய்ததால் அதை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டார். மேலும் இவருக்கு 17, 18, 19 வயதில் 3 மகள்களும் ஆகாஷ் என்ற 14 வயது மகனும் உள்ளனர். 4 பேருமே பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் படிப்பு செலவுக்கு பணம் இல்லாமலும், கல்வி கட்டணம் செலுத்த முடியாமலும் கஷ்டப்பட்டார்.

இதனால் விரக்தி அடைந்த சங்கர் தனது நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குபோட்டார். அப்போது கயிறு அறுந்துவிட்டதால் உயிர்தப்பினார். பின்னர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

முன்னதாக அவர் 6 பக்க கடிதம் எழுதிவைத்து இருந்தார். அதை போலீசார் கைப்பற்றினார்கள். அதில் தனது சாவுக்கு மோடி அரசுதான் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கிடையே விவசாயி தற்கொலை பற்றி கேள்விப்பட்ட மகாராஷ்டிர முதல்-மந்திரி தேவேந்திர பட்நாவிஸ் அவரது 4 பிள்ளைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!