கோவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிப்பு: மனிதர்களிடம் சோதிக்க முடிவு!

கொரோனா வைரஸ் தொற்று நோய் இந்தியாவில் தற்போது அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில், தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் அதன்மூலம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி மனிதர்களுக்கு கிடைக்கும். அதுவே இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முடிவு கட்டும் வாய்ப்பை உருவாக்கும். இதனால் இந்தியாவில் தடுப்பூசி எப்போது வரும் என்பதுதான் மக்களின் கனவாக அமைந்துள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் என உலகமெங்கும் 120 தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான சோதனைகள், பல்வேறு கட்டங்களில் உள்ளது. இந்தியாவில் 6 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இந்தியாவில், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு ‘கோவேக்சின்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி விலங்குகளுக்கு செலுத்தி பார்க்கப்பட்டுள்ளது. அந்த சோதனையில், இது பாதுகாப்பானது மற்றும் சிறந்த நோய் எதிர்ப்புச்சக்தியை கொண்டிருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, கொரோனா வைரசின் திரிபுகளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படி கொரோனா வைரஸ் திரிபுகளில் இருந்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து பார்ப்பதற்கு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தங்கள் ஒப்புதலை வழங்கி உள்ளனர்.

இந்த தடுப்பூசியை இந்தியாவின் தேசிய வைரலாஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசியை இந்த மாதம் மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து பார்க்க ஏற்பாடு ஆகி உள்ளது. இதற்கிடையே அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிற ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தார் ஒரு தடுப்பூசியை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தடுப்பூசியையும் இந்த மாதத்தின் பிற்பகுதியில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் செப்டம்பரில்தான் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்க தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது முன்கூட்டியே இந்த சோதனை நடைபெற இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இதையொட்டி அந்த நிறுவனத்தின் மூத்த அறிவியல் அதிகாரி பால் ஸ்டபல்ஸ், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கொரோனா வைரஸ் தடுப்பூசியை லாப நோக்கமற்று மலிவான விலையில் பொதுமக்களுக்கு கொண்டு வருவதற்காக இடர்பாடுகளை பொருட்படுத்தாமல் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளோம். புதிய தடுப்பூசி உற்பத்தி திறன்களை ஏற்படுத்தும் நோகத்தில் எங்கள் உலகளாவிய உற்பத்தி பிரிவை விரிவாக்கம் செய்கிறோம்.

நாங்கள் மற்ற நாடுகளில் உள்ள உற்பத்தி பிரிவுகளின் திறன்களையும் உயர்த்துகிறோம். எங்கள் இலக்கு, அடுத்த ஆண்டில் உலகளவில் 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகளை வழங்குவது ஆகும். இது பாதுகாப்பானதும், பயனுள்ளதுமாக இருக்கும். நாங்கள் இதுவரை பார்த்த முன்கூட்டிய தரவுகளின் பலத்தின் அடிப்படையில், ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர், எங்கள் தடுப்பூசி உருவாக்கும் பணியை விரைவுபடுத்த முடிந்தது. இந்த (ஜூலை) மாதத்தில் இருந்து எங்கள் தடுப்பூசியை ஒரு சிறிய பிரிவினருக்கு செலுத்து பாதுகாப்பு தன்மையை சோதிப்போம். அதன்பின்னர் படிப்படியாக பெரிய அளவில் ஏராளமானோருக்கு செலுத்தி சோதித்து பார்ப்போம்.

இந்த தடுப்பூசியை பொறுத்தமட்டில் எங்கள் நோக்கம், யார் எங்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்கிறார்களோ அவர்களின் செல்கள் ஸ்பைக் புரோட்டீனை உற்பத்தி செய்ய வேண்டும். ஆன்டிபாடி உற்பத்தியை தூண்ட வேண்டும். வைரசை எதிர்த்து போராடும் ஆற்றலை உருவாக்க வேண்டும் என்பதுதான். இந்த செயல்பாடுகள் மூலம், தடுப்பூசியானது நோய் எதிர்ப்பு மெமரியை உருவாக்குகிறது. அது வைரசை அடையாளம் காணவும், தாக்கவும் உடலை வழிநடத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார். எனவே இந்த ஆண்டில் எப்படியும் கொரோனா தடுப்பூசி, சந்தையில் விற்பனைக்கு வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு அதிகரித்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!