ஐமச தலைமையை கைப்பற்ற சம்பிக்க முயற்சி – ஆதாரங்களை வெளியிடுவேன் என்கிறார் ரவி

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை கைப்பற்றுவதற்கு சம்பிக்க ரணவக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என்று முன்னாள் எம்பி ரவி கருணாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நல்லாட்சி அரசாங்கத்திலும், அதற்கு முற்பட்ட அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்த சந்தர்ப்பங்களில் பல முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தார்.

அவ்விடயங்கள் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. மேலும் சம்பிக்க ரணவக்க, சில முறைப்பாடுகளை மூடி மறைக்கவே கட்சிகளையும் ஆட்சிகளையும் மாற்றிக்கொண்டார்.

ஆரம்பத்தில் மஹிந்தவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த அவர், நல்லாட்சி அரசாங்கத்தில் மைத்திரியுடன் கைகோர்த்து, தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மூடி மறைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மைத்திரிபால சிறிசேனவுக்கு துரோகமிழைத்து விட்டு ரணிலுடன் இணைந்தார். தற்போது ஐக்கிய தேசியக்கட்சிக்கும் துரோகமிழைத்து விட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை கைப்பற்றும் எண்ணத்திலேயே செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!