சேமித்த பணத்தை பூமிக்கடியில் புதைத்து வைத்த தாய்: தோண்டியபோது காத்திருந்த அதிர்ச்சி!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மகளின் திருமணத்திற்காக பணம் மற்றும் நகையை புதைத்து வைத்த தாய்க்கு நான்கு ஆண்டுகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதிரவேலூர் ஊராட்சி பட்டியமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (58). கூலித் தொழிலாளியான இவருக்கு உஷா என்ற 52 வயது மனைவியும், விமலா என்ற 17 வயதில் மகளும் உள்ளனர். தாயும் மகளும் வாய் பேச முடியாத, காதும் கேட்காத மாற்றுத்திறனாளிகள். ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலைக்கு சென்று வந்த கூலி தொகையை கடந்த 10 ஆண்டுகளாக மகளின் திருமணத்திற்காக உஷா சேர்த்து வைத்துள்ளார்.

ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளாக ரூபாய் 35,500 வரை சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பையில் சுருட்டி, அதோடு அரை பவுன் தங்க தோடையும் வைத்து கணவருக்கு தெரியாமல் வீட்டின் பின்புறம் குழி ஒன்றில் நான்கு ஆண்டுகளுக்கு ம்ன்பு தோண்டி புதைத்து வைத்துள்ளார். இந்தநிலையில், ராஜதுரை தனது குடிசையை பசுமை வீடுகள் திட்டத்தில் அனுமதி பெற்று வீடாகக் கட்டும் பணியை தொடங்கி உள்ளார்.

இதற்காக தொழிலாளர்கள், வீட்டின் பின்புறம் பள்ளம் தோண்டியபோது பிளாஸ்டிக் பையில், பழைய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை இருந்ததை உஷாவிடம் காண்பித்தனர். அப்போது,அவர் அந்த பணம் மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்தது என்று சைகை மூலம் தெரிவித்தார். ஆனால் அந்த பணம் எல்லாம் 2016-ஆம் ஆண்டிலே மத்திய அரசு தடை செய்துவிட்டதாக கூற, தாய் மற்றும் மகள் இருவருமே அந்த இடத்தில் கதறி அழுதனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!