நல்லூரில் ஆலயத்துக்குள் 50 பேருக்கே அனுமதி – காவடிகள், நேர்த்திக்கடன்களுக்கு தடை.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இம்முறை, சுகாதார நடைமுறைகளுக்கமைய, எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் என்று, யாழ். மாநகரசபை பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் உற்சவம் இடம்பெறும் என்றும், தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு தயார் என்றும் ஆலய நிர்வாகத்தினர் தமக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளுக்கமைய, மஹோற்சவத்தினை நடத்துவதற்கு சுகாதார வைத்திய அதிகாரி சில விடயங்களை பரிந்துரை செய்துள்ளார் என்றும், யாழ். மாநகரசபை பதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஆலயத்துக்குள் 50 பேர் மாத்திரம் செல்ல முடியும் , மஹோற்சவ காலப் பகுதியில் தூக்குக்காவடி, காவடி, அங்கப் பிரதட்சணை, அன்னதானங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் போன்றவற்றிக்கு அனுமதிக்கப்படாது.

ஆலயத்திற்குள் இடம்பெறும் உற்சவ நிகழ்வுகளில் ஆலய நிர்வாகம் கவனம் செலுத்தும். உற்சவகாலத்தில் ஆலயத்திற்கு வெளியே இடம்பெறும் செயற்பாடுகளுக்கு யாழ். மாநகர சபையும், பாதுகாப்புப் பிரிவினருமே பொறுப்பாளிகள்.

சுகாதார நடைமுறைகளை மீறுவதற்கான அதிகாரம் இல்லை என்பதால், தற்போதுள்ள சூழலில் சுகாதார நடைமுறைகளை அனைவரும் பின்பற்றியே ஆக வேண்டும்.

ஆலய உற்சவம் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் குறித்த காலப் பகுதிக்குள் ஏதாவது தளர்வுகள் ஏற்படும் பட்சத்தில், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இருப்பதாகவும், யாழ். மாநகரசபை பதில் முதல்வர் து.ஈசன் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!