கொரோனாவை வெற்றி கொள்வேன் என்று ஜனாதிபதி சூளுரை!

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைவதைக் கட்டுப்படுத்தி, நாட்டு மக்களை பாதுகாப்பதற்கான சவாலை வெற்றி கொள்வேன் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான விசேட ஜனாதிபதி செயலணியுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

உலகில் பெரும்பாலான நாடுகளுக்கு முன்னதாக, தொற்றை ஒழிப்பதற்கு வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்த போது, பல்வேறு சவால்கள் எழுந்த போதும் சிறந்த திட்டங்களுடன் அவை ஒவ்வொன்றையும் வெற்றி கொள்ள முடிந்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திலும் இவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும் அவற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை கைவிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய சவால்களுக்கும் முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறினார்.

அத்தோடு பிசிஆர். பரிசோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு சமூகத்தில் பரவல் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!