இந்தியாவுக்கு தப்பிச் சென்று விட்டார் சாரா புலஸ்தினி! – இன்ஸ்பெக்டர் சாட்சியம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளில் ஒருவரான, மொஹமட் ஹஸ்தூனின் மனைவியான சாரா எனப்படும் புலஸ்தினி இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார் என்று, தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன மஹின்கந்த சாட்சியமளித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“சாய்ந்தமருது தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக நம்பப்பட்ட சாரா, அங்கிருந்து தப்பி மறைந்து இருந்திருக்கலாம் என்ற தகவலை கடந்த 6ம் திகதி பெண் தகவலாளி மூலம் அறிந்து கொண்டேன்.

மட்டக்களப்பு – மாங்காடு பகுதியில் சாரா மறைந்திருந்ததாக தகவல் கிடைத்தது. இதனால் 8ம் திகதி மாங்காடு சென்று விசாரணையை முன்னெடுத்தேன்.

அங்கு ஒருவரை சந்தித்த போது, 2019 செப்டம்பர் மாதம் ஒரு நாள் அதிகாலை 3 மணியளவில், மாங்காடு பகுதியில் கப் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததை கண்டதாகவும், சாரா என சந்தேகிக்கப்படுகின்ற பெண்ணும் இரண்டு ஆண்களும் அதில் ஏறுவதை கண்டதாகவும் தெரிவித்தார்.

கப் வாகனத்தின் முன் ஆசனத்தில் பொலிஸ் அதிகாரி நாகூர்தம்பி அபுபக்கர் இருப்பதை கண்டதாகவும் அந்தப் பெண் கூறியிருந்தார்.

மன்னாரில் இருந்து படகு மூலம் சாரா இந்தியாவிற்கு தப்பி சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது என்றும் சாராவை தப்பிக்க அவரது மாமனாரும், வெளிநாட்டில் வசித்து வரும் அவரது சகோதரர் ஒருவரும் உதவியுள்ளனர்” என்றும், தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன மஹின்கந்த சாட்சியம் அளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!