இணையவழி போதனையில் குறுக்கிடும் விசமிகள்!

பாடசாலை அதிபர்களின் அலைபேசி இலக்கங்களை ஹக் செய்து தரவுகளை திருடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனையவர்களுக்கு தவறான பொருத்தமில்லாத தகவல்கள், படங்களை அனுப்பி அதிபர்கள், ஆசிரியர்களின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தப்படுவதாக வட மாகாண அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வட மாகாண அதிபர்கள் சங்கத்தின் தலைவர் வே.த.ஜெயந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“கொரோனா வைரஸ் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சூம் மற்றும் வைபர் ஊடாக முன்னெடுத்திருந்தோம். மூன்று மாத காலத்திலே அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி நலன் கருதி குறித்த செயலிகளின் ஊடாக கற்றல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தற்போது அதனூடாக எங்களுடைய அதிபர்கள் சங்க உறுப்பினர்களாக இருக்கின்றவர்களும் அத்தோடு இல்லாதவர்களுடைய தொலைபோசி இலக்கத்தினை ஹக் செய்து அதாவது இடைமறித்து எங்களுடைய தரவுகளை திருடி அந்த குழுவுக்குள் இருக்கின்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு தவறான தகவல்கள், படங்களை அனுப்பி அதிபர்கள், ஆசிரியர்களின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

இதன் காரனமாக எங்களுடைய அதிபர்கள், ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், விரக்திக்கும் ஆளாகியிருக்கின்றார்கள். இனிவரும் காலங்களிலும் இப்படியானதொரு நிகழ்வு கல்வி புலத்திலே நடைபெறுமாக இருந்தால் மாணவர் சமுதாயத்தை பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தும்.

076 5628297, 076 2138291, 0764909561, 076 69416303 ஆகிய இலக்கங்களில் இருந்தே இவ்வாறான தவறான செயல்கள் இடம்பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!