2000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’: என்ன காரணம்?..

இந்தியாவில் அயோத்தி ராமர் கோவிலுக்கு 2000 அடி ஆழத்தில் டைம் கேப்சூல் என்ற ஒன்று புதைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ராமர் கோவில் மற்றும் ராம ஜென்ம பூமியின் வரலாற்றை எதிர்கால சந்ததி அறிந்துகொள்ளும் வகையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு அடியில், 2000 அடி ஆழத்தில் டைம் கேப்சூல் புதைக்கப்படும் என்று ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது.

முக்கியமான தகவல்களை எதிர்காலத் தேவைக்காகப் பாதுகாப்பதே டைம் கேப்சூல். தற்கால நிகழ்வுகள், தகவல்கள், வரலாற்றுக் குறிப்புகள், ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை எதிர்கால சந்ததியினரும் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில், எளிதில் உடையாத வலிமையான குடுவைக்குள் வைத்து புதைத்து வைத்துவிடுவார்கள். இதன்மூலம் நிகழ்கால தகவல்களை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள முடியும்.

அதன் படி கடந்த 2019-ஆம் ஆண்டு, ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் திகதி அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம். அத்துடன் இல்லாமல் மூன்று மாதத்துக்குள் ராமர் கோவில் கட்டுவதற்குரிய அறக்கட்டளையையும் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா எனும் அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்கியது. இதையடுத்து, அயோத்தியில் ஆகஸ்ட் 5 -ஆம் திகதி பூமி பூஜை தொடங்குகிறது. அறக்கட்டளை உறுப்பினர் காமேஸ்வர் சவுபால், அயோத்தி வழக்கில் நடந்த சட்டப் போராட்டம் எதிர்காலத் தலைமுறையினருக்கு அறிந்து கொள்ள வேண்டும்.

இதன் காரணமாக கோவிலுக்கு அடியில் பூமிக்குள் 2000 அடி ஆழத்தில் ராமர் கோவில் பற்றிய தகவல்கள் அடங்கிய டைம் கேப்சூலை வைக்கப்போகிறோம். கோவில் கட்டுமானத்துக்காக பல்வேறு புனிதமான இடங்களிலிருந்தும் மண் கொண்டுவரப்படும். ராமர் தன் வாழ்க்கை பயணத்தில் சந்தித்த நதிகளிலிருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு, பூஜைக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!