வேலைவாய்ப்பை பெற்று கொடுங்கள் – பிரதமரிடம் யாழ் ஆயர் கோரிக்கை!

யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வண பிதா எஸ்.சந்திரகுமார் இன்று (28) காலை சந்தித்து ஆசி பெற்றார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் மத விவகாரங்களுக்கான அமைச்சு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் உள்ள நிலையில் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக யாழ். ஆயர் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், “மதங்களுக்கிடையே ஒற்றுமையினை வளர்க்கவேண்டும். வடக்கில் மக்கள் படுகின்ற கஷ்ட துன்பங்களை பிரதமருக்கு தெரியப்படுத்துமாறு கூறியுள்ளேன்.

வடக்கில் உள்ள முக்கியமான பிரச்சினையாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க வேண்டும். அத்தோடு கல்வி தொடர்பான விடயங்களிலும் முன்னேற்றம் ஏற்படுத்தவேண்டும். மீன்பிடி, விவசாயத்தில் கவனம் செலுத்தி முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அன்பாகக் கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த விடயத்தினை பிரதமருக்கு தெரியப்படுத்துமாறும் நான் கூறியுள்ளேன்” என்றார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமரின் மத விவரங்களுக்கான இணைப்பு செயலாளர், “யாழ். மறைமாவட்ட ஆயர் பிரதமரிடம் தெரியப்படுத்துமாறு என்னிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அனைத்து விடயங்களையும் நான் பிரதமரை சந்திக்கும் போது அவருக்கு எடுத்துரைப்பேன்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!