றிசாட் – மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்! – 4 பேர் காயம்.

வவுனியா- சாளம்பைக்குளம் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் றிசாட் பதியுதீன் ஆதரவாளர்களுக்கும், மஸ்தான் ஆதரவாளர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் 4பேர் காயமடைந்துள்ளனர்.

செட்டிகுளம் -மெனிக்பாம் பகுதியில் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு விட்டு சாளம்பைக்குளம் பகுதியில் ஒரு வீட்டிற்கு சென்ற போது அங்கு வந்த றிசாட் பதியுதீனின் ஆதரவாளர்கள் தம்மீது தாக்குதல் நடத்தியதாக மஸ்தானின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது ஆதரவாளர்கள் 6 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர் என்றும், தமது வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

அதேவேளை, மஸ்தான் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்ட முனைந்ததாகவும், அதனை தடுக்க முற்பட்டபோது, அவர்கள் தம் மீது தாக்குதல் மேற்கொண்டதாக றிசாட் பதியுதீனின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, இரண்டு தரப்புகளினதும் ஆதரவாளர்கள் சாளம்பைக்குளம் பகுதியில் ஒன்று கூடியதால் நேற்றிரவு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் பூவரசங்குளம் பொலிசார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!