அடிப்படை உரிமைகளில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை!- சம்பந்தன்

இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாகவே வாக்குறுதிகளை மீறி வந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் மற்றும் தூதரக அதிகாரிகள் குழு நேற்று திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தது.இந்தச் சந்திப்புத் தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்ட போதே, இரா.சம்பந்தன் இவ்வாறு கூறியுள்ளார்.

“நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக சுவிஸ் தூதுவர், அவரது அரசியல் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். குறிப்பாக மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் சம்பந்தமாகவும் தேர்தலுக்கு பின்னர் நிலைமை எவ்வாறாக அமையும் என்பது பற்றியும் அவரது கணிப்பை என்னிடம் கூறினார்.

தேர்தலுக்கு பின்னர் பல கடமைகளை நிறைவேற்ற வேண்டிவரும். ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அரசியல் ரீதியாக எடுக்கப்பட வேண்டிய முடிவுகள், புதிய அரசியல் சாசன திருத்தம் உட்பட பல விடயங்கள், புதிய நாடாளுமன்றம் கூடிய பின்னரே முன்னெடுக்கப்படும் என நான் அவர்களுக்கு தெரிவித்தேன்.

இந்த விடயங்கள் இலகுவாக இருக்காது. கடினமாக இருக்கும். இருந்தபோதும் ஒரு அரசாங்கம், ஒரு நாடு தான் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறி அல்லது சர்வதேச சட்டத்தை மீறி, அவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு மாறாக தொடர்ந்தும் செயற்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல. இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக தனது வாக்குறுதிகளை மீறி செயற்பட்டு வந்திருக்கின்றது. அது முடிவு வரவேண்டும்.

எம்மை பொறுத்தவரையில், நாங்கள் எவரையும் பகைக்க விரும்பவில்லை. அதேநேரம் எமது மக்களின் அடிப்படை உரிமைகளில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை. எமது மக்கள் சார்பாக மேற்கொள்ள வேண்டிய கடமைகளை மேற்கொள்வோம். அதேபோன்று எடுக்கவேண்டிய முடிவுகளை எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!