என்னிடமிருந்து ஒரு ரூபாய் கூட பயங்கரவாத செயலுக்கு போகவில்லை – ரிஷாட்

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுக்கு தனது பணம் செலவிடப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்தினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நிராகரித்துள்ளார்.

கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மேலும்,

“பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டதாக தெரிவித்தே சில ஊடகங்கள் இன்றைய தினம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளன. எனினும் இது அப்பட்டமான பொய்.

தேர்தல் நெருங்குகின்ற நேரம் பார்த்து இவ்வாறான ஒரு பொய்யினைச் சொல்வதன் ஊடாக, தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுப்பதற்கு செய்யப்படுகின்ற ஒரு சதியாகவே இதனைப் பார்க்கின்றோம்.

நான் என்னுடைய ஒரு ரூபாய் பணத்தினையும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தவில்லை. இன்சாப் இப்ராஹீம் அஹமட் என்ற வியாபாரியினைத் தவிர ஷஹ்ரான் உட்பட இந்த பயங்கரவாதத்துடன் தொடர்புடைய யாரையும் எனக்கு தெரியாது.

இந்தநிலையில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இவ்வாறான ஒரு விடயத்தினைத் தெரிவித்திருந்தால் அதனை அவர் உடனடியாக வாபஸ் பெற்று உண்மையினை இந்த நாட்டிற்கு சொல்ல வேண்டும்.

அவ்வாறு அவர் சொல்லாவிட்டால். ஒரு வாரத்திற்குள் அவர் அதனைச் செய்யாவிட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!