தமிழ்த் தேசிய உணர்வை நீர்த்துப் போகச் செய்ய ஆட்சியாளர்கள் சதி!

தமிழ்மக்கள் மத்தியில் இருந்து தமிழ்த் தேசிய உணர்வை நீர்த்துப் போகச் செய்யும் அரசின் சதித் தனங்களைப் புரிந்து கொள்ளாத எமது மக்களின் ஒரு பகுதியினர் அவர்களை ஆதரிக்க முற்படுவது ஆபத்தான விடயம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணை பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி வடக்கு கிழக்கில் 52000 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் ஓர் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் பெற்றுள்ளது.

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை பெற்றுக்கொள்வதிலும் யுத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கள், வடக்குகிழக்கில் பௌத்த சிங்கள மயமாக்கல், தமிழ் மக்களின் தொன்மைகளை அழிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை ஆகிய விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாளத் தவறியகாரணத்தினால் இவற்றையும் வினைத்திறனுடன் கையாளக் கூடிய புதிய தலைமை தேவை என்கிற கருத்துகடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் வளர்ச்சியுற்று வந்தது.

60 ஆண்டு கால விடுதலைப் போராட்டத்திற்கு நாம் கொடுத்த விலை மிகமிக அதிகமானது. எமது மக்கள் பட்ட வலி சொல்லி மாளாதது. எனினும் நாமும் எமது எதிர்காலசந்ததியும் இந்த நாட்டில் தமது சொந்த அடையாளங்களுடனும் அனைத்து உரிமைகளுடனும் வாழ்வதற்குதொடர்ந்தும் நாம் போராட வேண்டி உள்ளது. இது ஒரு சில தலைவர்களின் போராட்டம் அல்ல. மாறாக மக்கள் அனைவரும் தமக்குரிய பொறுப்புக்களை செயற்படுத்துவதன் மூலம் வெற்றிகொள்ளப்பட வேண்டிய போராட்டமாகும்.

எனவே தமிழ் தேசிய உணர்வு என்பது எமது மக்கள் மத்தியில் வலிமையாக இருக்க வேண்டும். அதன் மூலமே தமிழ்த் தேசிய இனத்துக்கான தீர்வு சாத்தியமாகும். இலங்கையின் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் மிழ்த் தேசிய உணர்வை நீர்த்துப் போகச் செய்வதற்கு பல முனைகளில் திட்டமிட்டு செயற்படுகின்றனர்.

இதன் ஓர் முக்கிய வடிவமாக எமது மக்கள் மத்தியில் இருக்கும் தமது ஒரு சில முகவர்களையும் அரசைசார்ந்து தம்மை வளர்த்துக் கொள்ள முனையும் சிலரையும் பதவிகள் அதிகாரங்களைக் கொடுத்து தமிழ்மக்கள் மத்தியில் இருந்து தமிழ்த் தேசிய உணர்வை நீர்த்துப் போகச் செய்யும் திட்டத்தைசெயற்படுத்தி வருகின்றனர். இவர்களுடைய இந்த சதித் தனங்களைப் புரிந்து கொள்ளாத எமது மக்களின்ஒரு பகுதியினர் அவர்களை ஆதரிக்க முற்படுவது ஆபத்தான ஒரு விடயமாகும்.

ஏறத்தாள 45 ஆண்டுகளுக்குப் பின்னால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி யாழ் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளதுடன் அரச பங்காளிக் கட்சிகளும் வடக்கு கிழக்கில் பல ஆசனங்களை பெற்றுள்ளன. தீர்வு நோக்கிய எமது போராட்டத்தை மிகவும் பலவீனப்படுத்தக் கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. இவ்விடயத்தில் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதுடன் அடுத்து வரும்காலங்களில் இத்தகைய தவறுகள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவது நாம் எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம் என்பதுடன் எமது போராட்டத்தை வலிமையுடன் சரியான திசைவழியில் எடுத்துச் செல்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!