உலகின் அதிக வயதானவராக கின்னஸ் அங்கீகாரம் பெற்ற ஜப்பான் தாத்தா

உலகில் வாழ்ந்து வருபவர்களில் அதிக வயதான ஆண்மகனாக ஜப்பான் நாட்டை சேர்ந்த மசாஸோ நோனாக்கா(112) என்பவரை கின்னஸ் நிறுவனம் இன்று அங்கீகரீத்துள்ளது.

உலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து, சிறப்பித்து வருகிறது.

அவ்வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீயென்னி லூயிஸ் கால்மென்ட் என்ற பெண்மணி மிக அதிககாலம் வாழ்ந்த நபராக அறியப்படுகிறார். 122 ஆண்டுகள் 164 நாட்கள் உயிர்வாழ்ந்த இவர் கடந்த 1997-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

அவருக்கு பின்னர் 116 ஆண்டுகள் 54 நாட்கள் உயிர் வாழ்ந்து கடந்த 2013-ம் ஆண்டில் மரணம் அடைந்த ஜிரோய்மோன் கிமுரா என்பவர்தான் கின்னஸ் சான்றுகளின்படி மிக அதிக காலம் வாழ்ந்தவராக கருதப்படுகிறார்.

அவருக்கு பின்னர் பல நாடுகளை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அதிக ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்த நபர்களாக கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை உலகில் மிக வயதான நபராக அறியப்பட்ட ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரான்சிஸ்க்கோ நுனேஸ் ஒலிவேரா
29-1-2018 அன்று தனது 113-வது வயதில் மரணம் அடைந்தார்.

இதைதொடர்ந்து, ஜப்பான் நாட்டை சேர்ந்த மசாஸோ நோனாக்கா(112) என்பவரை உலகில் வாழ்ந்து வருபவர்களில் அதிக வயதான ஆண்மகனாக கின்னஸ் நிறுவனம் இன்று அங்கீகரீத்துள்ளது.

ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 900 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹொக்கைடோ தீவில் கடந்த 25-7-1905 அன்று பிறந்த மசாஸோ நோனாக்கா, இளம்வயதில் விவசாயம் மற்றும் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

பின்னர், அஷோரா பகுதியில் ‘ஸ்பா’ எனப்படும் அழகு நிலையம் நடத்திவந்த இவருக்கு இரு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். இனிப்பு வகைகள் மற்றும் கேக் ஆகியவற்றை விரும்பி உண்ணும் இவரை சிறப்பிக்க இன்று நடத்தப்பட்ட விழாவில் மசாஸோ நோனாக்கா தனது குடும்பத்தாருடன் கலந்து கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!