மூத்த மொழி தமிழ் என கூறியதால் கூக்குரலிடுவது கீழ்த்தரமான ஜனநாயக விரோத செயல்! – சிவாஜிலிங்கம் சீற்றம்!

“நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில் சத்திய சி.வி.விக்னேஸ்வரன் எம்பி ஆற்றிய உரை சிங்கள இனவாதிகளை கொதித்தெழ வைத்துள்ளது. எங்களுடைய வரலாற்றை எங்களுடைய விருப்பங்களை நாம் தெரிவிப்பது அவர்களுக்கு கொதிப்பினை ஏற்படுத்துகிறதென்றால் எங்களை விட்டுவிடுங்கள். நீங்கள் உங்களுடைய பாட்டிலே செல்லுங்கள் நாங்கள் எங்களுடைய வழிகளை பார்த்துக் கொள்கின்றோம் என எண்ணத் தோன்றுகின்றது”

இவ்வாறு தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும்,

“6ம் நூற்றாண்டு காலப்பகுதியில் தான் சிங்கள மொழி உருவாகியது. அத்தோடு அவர்களுடைய சிங்கள வரலாற்றினைக் கூறும் மகாவம்சம் கூட பாலி மொழியில் தான் எழுதப்பட்டுள்ளது. தமிழருக்கான வரலாறு தமிழ் மொழியில் எழுதப்படும். அதனை பின்னர் வேறு மொழிகளில் மாற்றி அமைக்கலாம். தமிழ் மொழி தொன்மையான மொழி இலட்சக் கணக்கான ஆண்டுகளைத் தாண்டி தமிழ்மொழி காணப்படுகின்றது.

செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒரு மொழி என்று அங்கீகரிக்கப்பட்ட பின்னர் உலகத்திலே பல நிறுவனங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது மூத்த குடிமக்களினுடைய மொழி என உரையாற்றிய போது கூக்குரலிடுவதும் நாடாளுமன்ற பதிவேட்டில் இருந்து நீக்குவதை பரிசீலிப்பதாக சபாநாயகர் கூறுவதும் கீழ்த்தரமான ஒரு ஜனநாயக முறைக்கு விரோதமான செயற்பாடாகவே நான் கருதுகின்றேன்.

நீக்குவதோ வைத்திருப்பதோ எதுவாக இருந்தாலும் எமது மூத்த மொழி மூத்த மொழியாகவே தான் இருக்கும். அவ்வாறு குறித்த உரையை நீக்கினால் நாங்கள் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்திடமும் அதேபோல கொமென் வெல்த் நாடாளுமன்றத்த ஒன்றியத்திடமும் சர்வதேச சமூகத்திடமும் முறையிடுவோம்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!