புல்வாமா தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவியாக இருந்த 23 வயது பெண்: வெளியான திடுக்கிடும் தகவல்!

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணி வகுப்பின் மீது தற்கொலைபடை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். புல்வாமாவில நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது. தாக்கல் செய்யப்பட்ட 13,500 பக்க குற்றப்பத்திரிகையில் 19 பேர் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர்.

புல்வாமா பயங்கர தற்கொலைத் தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) பயங்கரவாதிகளுக்கு உதவுவதில் ஒரு இளம் பெண் முக்கிய பங்கு வகித்ததாக தேசிய புலனாய்வு அமைப்பின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மார்ச் மாதம் காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பாகிஸ்தான் வெடிகுண்டு தயாரித்த முக்கிய குற்ரவாளி முகமது உமர் பாரூக்குடன் இன்ஷா ஜான், என்ற அந்த 23 வயது பெண் தொடர்பில் இருந்ததாக என்ஐஏ கூறுகிறது. தொலைபேசி மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் வாயிலாக அவர்கள் தொடர்பில் இருந்தனர்.

“அவர்களுக்கு இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட பல செய்திகளை நாங்கள் மீட்டெடுத்துள்ளோம், அவை அவர்களின் நெருக்கத்தை குறிக்கின்றன, இதை எங்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளோம்” என்று ஒரு மூத்த என்ஐஏ அதிகாரி 13,500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த ஒரு நாள் கழித்து தெரிவித்துள்ளார். இன்ஷா ஜானின் தந்தை தாரிக் பிர்வும் இந்த உறவை அறிந்திருந்தார் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.

புல்வாமாவிலும் அதைச் சுற்றியும் உமர் பாரூக் மற்றும் இரண்டு கூட்டாளிகளின் நடமாட்டத்திற்கு தாரிக் பிர் வசதி செய்ததாகக் கூறப்படுகிறது. “தந்தை-மகள் இரட்டையர்கள் உமர் பாரூக், சமீர் தார் மற்றும் ஆதில் அகமது தார் ஆகியோருக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பிற தளவாடங்களை 15 க்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் வழங்கி உள்ளனர். பயங்கரவாதிகள் ஒரு நேரத்தில் இரண்டு முதல் நான்கு நாட்கள் 2018 மற்றும் 2019 க்கு இடையில் பலமுறை தங்கியிருந்தனர் என்று அதிகாரி கூறி உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!