மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் இன்று நல்லடக்கம்!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூளையில் கட்டியை அகற்ற ஆபரேஷன் செய்ததை தொடர்ந்து, அவர் கோமா நிலையை அடைந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் கண்டறியப்பட்டது. இதற்கிடையே, டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்.

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இன்று காலை டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள பிரணாப் முகர்ஜி இல்லத்தில், அவரது புகைப்படத்திற்கு மலர் வளையம் வைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, பிரணாப் முகர்ஜியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக அவரது உடல், ராணுவ வாகனத்திற்கு பதிலாக வேனில் எடுத்துச் செல்லப்பட்டது. டெல்லி லோதி பகுதியில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!