மும்பையில் பயங்கரம்: சாலையோரம் பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்த கார் – 4 பேர் பலி!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள க்ரவ்போர்ட் சந்தைப்பகுதியில் கபே ஜனதா என்ற உணவக விடுதி உள்ளது. இந்த உணவகத்திற்கு அருகே உள்ள நடைபாதையில் நேற்று இரவு வழக்கம்போல பலர் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த கார் நடைபாதையில் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் உணவகம் அருகே நடைபாதையில் அமர்ந்திருந்தவர்கள் 9 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் காரை ஓட்டிவந்த நபரும் உள்ளடக்கம்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சிய 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உணவக விடுதி அருகே நடைபாதையில் அமர்ந்திருந்தவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!