தொடர்ந்து எரியும் கப்பல் – ஒரு அதிகாரியின் மரணத்தை உறுதிப்படுத்தியது கடற்படை

கிழக்கு கடலில் பற்றி எரியும் “MT NEW DIAMOND“ என்ற கப்பலில் ஏற்பட்ட வெடிப்பில் காணாமல் போயிருந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, துறைமுக அதிகார சபை, இந்திய கடற்படை, இந்திய விமானப்படை, மற்றும் இந்திய கரையோர பாதுகாப்பு படை ஆகியன இணைந்து தீயினை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சங்கமன்கந்த கடற்பரப்பில் இருந்த 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் கொதிகலனில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக குறித்த கப்பல் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!