சம்பந்தன், விக்கி, கஜனை சிறைக்குள் தள்ளுவதே ஒரு வழி!

புலிகளைப் புகழ்ந்து அவர்களின் கொடிய பயங்கரவாதப் போராட்டத்தை நியாயப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய மூவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைப்பதுதான் ஒரே வழி என்று அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூறியுள்ளனர்.

“தமிழீழ விடுதலைப்புலிகள் சிங்கள மக்களை மட்டுமன்றி தமிழ், முஸ்லிம மக்களையும் படுகொலை செய்தவர்கள். சிரேஷ்ட தமிழ் அரசியல் தலைவர்களையும் அவர்கள் சுட்டுப் படுகொலை செய்தவர்கள்.

நாட்டின் வளங்களை நாசப்படுத்தியவர்கள். நாட்டுக்கு வருவாயை ஈட்டித்தரும் பொருளாதார மையங்களை அழித்தவர்கள். இப்படிப்பட்ட புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது?

புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்றபடியால்தான் பல நாடுகள் அந்த அமைப்பைத் தடை செய்தன.

தமிழீழக் கனவுடன் – தனிநாட்டுக் கனவுடன் இந்த நாட்டை நாசமாக்கிய புலிகள் இறுதியில் முள்ளிவாய்க்காலில் கூண்டோடு அழிந்தார்கள்.

முள்ளிவாய்க்கால் மண் பயங்கரவாதிகள் அழிந்த மண். அந்த மண்ணில் சத்தியப் பிரமாணம் செய்த விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும் தமது செயலை இப்போது நியாயப்படுத்துகின்றார்கள்.

அதேவேளை, கடந்த நல்லாட்சியில் முள்ளிவாய்க்கால் சென்று பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்து விளக்கேற்றிய சம்பந்தனும் பொதுத்தேர்தல் மேடைகளில் புலிகளின் பயங்கரவாதப் போராட்டத்தை நியாயப்படுத்தி உரையாற்றியிருந்தார்.

இம்மூவரும் 9வது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். ஆனால், இவர்கள் மூவரும் திருந்துவதாக இல்லை.

அதியுயர் சபையிலும் புலிகளின் பாணியில் செயற்படுகின்றார்கள். இவர்கள் மூவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைப்பதுதான் ஒரே வழி” – என்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!