விக்கி- டெனீஸ் மோதல் முடிவுக்கு வருகிறது! – வழக்கை வாபஸ் பெற இணக்கம்?

சி.வி.விக்னேஸ்வரன் மீது டெனீஸ்வரன் தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற வேண்டும் வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன், தீர்மானித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.வி.விக்னேஸ்வரன் மீது டெனீஸ்வரன் தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற வேண்டும் என சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் உட்பட பலர் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் முகப்புத்தகப் பதிவு ஒன்றை டெனீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “என்னுடைய நோக்கம் முன்னாள் முதலமைச்சரை சிறையில் அடைக்க வேண்டும் என்பதல்ல, எந்த தவறும் செய்யாமல் வீண்பழி சுமத்தியது பிழையென்பதை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே வழக்குத் தொடுத்தேன்.

அந்த நேரத்தில் எவரும் இதில் உள்ள நியாயப்பாடுகளை சீர்தூக்கிப் பார்க்க முன்வரவில்லை. எனக்கு பக்கபலமாக இருந்தது என்னுடைய நியாயப்பாடு ஒன்று மட்டுமே.

கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும், இன்று எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முதலமைச்சர் உரக்கச் சொல்லி இருக்கின்றார்.

முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன். இதனை எமது இனம்சார்ந்த ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன். அதன் பொருட்டு அவருக்கு பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன்.

குருபரன் தங்களுடைய வெளிப்படையான கருத்துக்கு நிச்சயம் மதிப்பளிப்பேன். என்றுள்ளார்.

விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்த வழக்கை விலக்கிக் கொள்வதாக தொலைபேசி மூலம், விக்னேஸ்வரனுக்கு டெனீஸ்வரன் அறிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!