‘உலக நாடுகளை அச்சுறுத்துவது அமெரிக்கா தான், நாங்கள் இல்லை’ – சீனா அதிரடி!

இராணுவத்தின் பலத்தை காட்டி உலக நாடுகளை அச்சுறுத்துவது நாங்கள் கிடையாது, நீங்கள் தான் என்று அமெரிக்கா மீது சீனா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன், கடந்த செப்டம்பர் 2-ஆம் திகதி அன்று வருடாந்திர அறிக்கை வெளியிட்டது. 200 பக்கம் கொண்ட இந்த அறிக்கையில், சீன இராணுவம் பற்றி கடுமையாக விமர்சித்திருந்தது. குறிப்பாக, இந்தியா, பூடான் போன்ற அண்டை நாடுகளின் எல்லை பகுதிகளில் சீனா தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறது.

கிழக்கு மற்றும் தென் சீனக்கடல் எல்லைப் பகுதியிலும் அச்சுறுத்தி பணிய வைக்கும் யுக்தியைக் கையாண்டு வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைகள் உலக நாடுகளின் அமைதிக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இது சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிராக தனது இராணுவ பலத்தை சீனா கட்டமைத்துக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கலோனல் வு கியான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சர்வதேச அமைதிக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் அமெரிக்காதான் நடந்து கொள்கிறது. அது தனது இராணுவ பலத்தை காட்டி உலக நாடுகளை அச்சுறுத்துகிறது. ஈராக், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்கா தலையிட்டதால் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

பல லட்சம் மக்கள் அகதிகளாகி விட்டனர். பென்டகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சீனாவைப் பற்றி அவதூறான தகவல்கள் உள்ளன. சீனாவின் மிகப்பெரிய மக்கள் தொகைக்கு ஏற்றவாறே இராணுவ பலம் வடிவமைக்கப்படுகிறது. இதை அமெரிக்கா நேரில் வந்தும் பார்வையிடலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!