மட்டக்களப்பில் ஆலயங்களில் நினைவேந்தல்களுக்கு தடை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இரண்டு ஆலயங்களில் நடத்தப்படவிருந்த உண்ணாவிரதம் மற்றும் அமைதிப் பிரார்த்தனைக்கு நீதிமன்றங்களின் மூலம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை நடத்துவதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு மட்டக்களப்பு நீதிமன்றத்தின் மூலம், கொக்கட்டிச்சோலை பொலிசார் தடை உத்தரவை பெற்றுள்ளனர்.

நேற்று அரியநேத்திரனின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் இந்த தடை உத்தரவை கையளித்ததுள்ளனர்.

அத்துடன் இன்று காலை 07 மணிக்கு மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் விசாரணைக்காக சமூகம் தருமாறும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

அதேவேளை, மட்டக்களப்பு – கல்லடி முருகன் ஆலயத்தில் இன்று இடம்பெறவிருந்த அமைதிப் பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

காத்தான்குடி பொலிசார் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்த நிகழ்வை நடத்தக் கூடாது என்று மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவனுக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!