முழு அடைப்பு மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும்!

வடக்கு, கிழக்கில் நேற்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நினைவேந்தல் உரிமையைத் தடுக்கும் அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நேற்று நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர், வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மாவை சேனாதிராஜா இவ்வாறு கூறியுள்ளார்.

“உலகில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமை, மனித குலத்தினாலும் ஐ.நா. சாசனத்தினாலும் உடன்படிக்கைகளினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இக்கடப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றபோதும் இலங்கையில் இறந்தவர்கள் நினைவு கூரும் கடப்பாடுகள் அரசுகளினால் மறுக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வருகிறது.

இதற்கு எதிராக வடக்கு, கிழக்கில் நேற்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போராட்டங்களின் மூலம், விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!