இராணுவப் பிடியில் இருந்து விடுபட்டார் வயாவிளான் ஞான வைரவர்!

வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. முன்னர், வைரவர் மடை, விசாகப் பொங்கல் இடம்பெறும் போது அன்றைய தினம் மட்டும் மக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்திருந்தனர்.

இந்நிலையில் ஆலயக்குருக்கள், ஆலய நிர்வாகத்தினர் ஆகியோர் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியிடம் இக்கோயிலினை விடுவித்து தருமாறு கோரியிருந்தார். இதன்படி இக்கோயில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் (ஜே / 254) பலாலி வடக்கில் 17 ஏக்கரும், (ஜே. 245) வசாவிளான் மேற்குப் பகுதியில் 12 ஏக்கரும், (ஜே/ 249) தையிட்டி வடக்கு பகுதியில் 9 ஏக்கரும், (ஜே/ 244) வசாவிளான் கிழக்குப் பிரதேசத்தில் 10 ஏக்கரும், (ஜே/ 252) பலாலி தெற்கு கிராம சேவகர் பிரிவில் 13.5 ஏக்கரும் மற்றும் (ஜே/ 250) கிராம சேவகர் தையிட்டியில் 8.5 ஏக்கர் உள்ளடங்களாக சுமார் 60 ஏக்கர் மக்களின் காணிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டன.

இப்பகுதியில் இராணுவத்தினர் முகாம்களையும், முட்கம்பி வேலிகளையும் அகற்றி வருவதால் நாளை அல்லது நாளை மறுதினம் மக்கள் காணிகளுக்குள் செல்ல முடியும் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஆதிமயிலிட்டி பூதவராயர் கோயில் பாதையையும் படையினர் விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!