கொலம்பியாவில் இரண்டு வருடங்களுக்கு முன் மாயமான பெண்: நடுக்கடலில் மோசமான நிலையில் மீட்பு!

கொலம்பியாவில் இரண்டு ஆண்டுகளாக காணாமல் போன ஒரு பெண்ணை நடுக்கடலில் மிதந்த நிலையில் மீனவர்கள் மீட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புவேர்ட்டோ கொலம்பியா கடற்பகுதியில் இருந்தே கடந்த 26 ஆம் திகதி குறித்த பெண்மணியை மீனவர்கள் மீட்டுள்ளனர். அவரது பெயர் ஏஞ்சலிகா கெய்தன் எனவும் 46 வயதான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமானதாகவும் தெரிய வந்துள்ளது. கொடும் தணுப்பில், மிகவும் ஆபத்தான நிலையிலேயே மீனவர்களால் குறித்த பெண்மணி மீட்கப்பட்டுள்ளார்.

மட்டுமின்றி ஒரு வார்த்தை கூட பேச முடியாதபடி, பலவீனமான நிலையில் இருந்ததாக முதலுதவி அளித்த மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மீனவர்களான ரோலண்டோ விஸ்பால் மற்றும் அவரது நண்பர் குஸ்டாவோ ஆகிய இருவருமே நடுக்கடலில் பெண் ஒருவர் மிதப்பதை முதல் கண்டுள்ளனர். சடலமென்றே கருதிய இவர்களுக்கு, அவரை மீட்டு படகில் முதலுதவி அளித்தபோது உயிர் இருப்பதை உணர்ந்துள்ளனர்.

ரோலண்டோ முதலில் ஸ்பானிய மொழியில் உரையாட முயற்சித்து, பின்னர் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். ஆனால், இவர் பேசுவதை உணர்ந்த குறித்த பெண்மணியால் பதிலளிக்க முடியாமல் போனது. மீனவர்கள் அளித்த தண்ணீரை குடித்த அவரால் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்துள்ளார். சுமார் 8 மணி நேரம் அவர் கடலில் மிதந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, குறித்த பெண்மணியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக தமது தாயார் தொடர்பில் எந்த தகவலும் இல்லை எனவும், அவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை எனவும் மகள் அலெஜாண்ட்ரா காஸ்டிப்ளாங்கோ தெரிவித்துள்ளார். ஏஞ்சலிகா காணாமல் போனதன் பின்னர் என்ன நடந்தது என்று பொலிசார் இப்போது விசாரித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!