கார் விபத்தில் தமிழக இளைஞர்கள் ஐவர் பலி

இந்தியாவின் கர்நாடகாவில் நிகழ்ந்த வீதி விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தின் வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த 11 இளைஞர்கள் காரில் கோவாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, நேற்றிரவு கோவாவில் இருந்து தமிழகத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

இதன்போது கர்நாடாகாவின் சித்திரத்துர்கா மாவட்டத்தில் அவர்கள் சென்ற கார் மீது எதிரே வந்த லொறி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இன்று காலை 5 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தில் காரில் இருந்த 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பலியான குறித்த ஐவரும் 25 வயதுக்குடப்ட்டவர்கள் ஆவர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், 5 இளைஞர்களின் சடலங்களும் மரணவிசாரணைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மேலும் பொலிஸார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லொறியும் தமிழகத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!