பிரான்சில் கனமழை: வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் சடலங்கள்!

பிரான்சில் பெரும் சேதத்தை ஏற்படுத்திவரும் அலெக்ஸ் புயலால் கல்லறைகள் சேதமடைந்து பிணங்கள் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அலெக்ஸ் புயலால் பிரான்சின் Alpes-Maritimes பகுதி மற்றும் இத்தாலியில் லிகுரியா மற்றும் பீட்மாண்ட் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அடைமழை மற்றும் பெருவெள்ளத்தால் குடியிருப்புகள், வாகனங்கள் என பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே புயலில் சிக்கி பலர் இறந்திருக்க கூடும் என்ற தகவல் முதலில் வெளியானது. ஆனால் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள் எல்லாம், கல்லறைத் தோட்டங்கள் சேதமடைந்துள்ளதால், வெள்ளத்தில் அவை அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், மாயமானதாக கருதப்படும் நபர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார். 12,000 குடியிருப்பாளர்கள் வசிக்கும் மலைப்பிரதேசத்தில் அவசர நடவடிக்கையின் ஒருபகுட்ஜியாக சுமார் 900 க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர், 500 காவல்துறை அதிகாரிகள் மற்றும் சில துருப்புக்கள் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுவரை 700 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஹொட்டல் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!