கலைப்பதாக அடிக்கடி அச்சுறுத்தினார் மைத்திரி!

2018ம் ஆண்டு ஒக்டோபர் 26ம் திகதி ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு சபை கூட்டவுமில்லை. தன்னை அழைக்கவில்லையென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முதல் தடவையாக சாட்சியமளிக்கும் போதே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

2015ம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு, 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக தனக்கு ஒரு நூல் ஒன்றைக் கூட எழுத முடியுமென ரணில் தெரிவித்தார்.

மேலும் 52 நாள் அரசாங்கத்தின் போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஸவும் பாதுகாப்பு பேரவையைக் கூட்டவில்லை என தம்மிடம் தெரிவித்ததாக ரணில் கூறியுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றத்தை கலைத்துவிடுவதாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவ்வப்போது அச்சுறுத்தல் விடுத்ததாகவும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!