பால் கொடுத்து தூங்க வைத்த தாய்: மறுநாள் காலை அசைவின்றி கிடந்த பிஞ்சு குழந்தை – விசாரணையில் அம்பலமான உண்மை!

தமிழகத்தில் பிறந்த பெண் குழந்தையை வளர்க்க இயலாமல் கஷ்டப்பட்ட பெண் ஒருவர் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாஷா. இவர் தனியர பேருந்து ஒன்றில் நடத்துனராக பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பேருந்துகள் இயக்கப்படவில்லை.இதனால் போதிய வருமானம் இன்றி சாதிக்பாஷா தவித்து வந்துள்ளார்.

இவருக்கு யாஸ்மின் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மூன்றாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தைக்கு ஆலையாபானு என்று அந்த தம்பதி பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறந்து மூன்று மாதங்களே ஆன நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் திகதி இரவு தாய் யாஸ்மின், பால் கொடுத்து தூங்க வைத்த நிலையில் மறுநாள் காலை குழந்தை அசைவின்றி கிடந்துள்ளது.

அந்த குழந்தையை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். நன்றாக இருந்த குழந்தை இறந்ததை ஏற்றுக் கொள்ள முடியாத குழந்தையின் தந்தை சாதிக்பாஷா, தனது குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, குழந்தையின் சடலத்தை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வின் பரிசோதனை முடிவுகள் ஒரு மாதம் கழித்து வியாழக்கிழமை வெளியானது. இதில் உயிரிழப்பதற்கு முந்தைய நாள் இரவில் குழந்தை அருந்திய பாலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்ததால், குழந்தையின் பெற்றோரை அழைத்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஏற்கனவே ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில் , கொரோனா ஊரடங்கால் பேருந்துகள் இயங்காமல், கணவர் வேலை இழந்து வருமானமின்றி மொத்த குடும்பமும் தவித்த சூழலில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை எப்படி வளர்த்து கரைசேர்க்க போகிறோம் ? என்று எண்ணி பாலில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து தனது பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்ததை தாய் யாஸ்மின் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதை அறிந்து கணவன் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் குழந்தை மர்ம மரண வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த பொலிசார் குழந்தையின் தாய் யாஸ்மினை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!