ஜோ பைடனை கொல்ல திட்டம்: ஆயுதங்களுடன் நடமாடிய இளைஞர் அதிரடி கைது!

அமெரிக்க தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், ஜனாதிபதி வேட்பாளரான ஜோ பைடனை கொல்லும் பொருட்டு ஆயுதங்களுடன் நடமாடிய இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கடந்த மே மாதம் நடந்த இந்த கைது நடவடிக்கையில் தொடர்புடைய 19 வயதான அலெக்சாண்டர் ஹில்லெல் ட்ரைஸ்மேன் மீது சிறார் ஆபாச படங்கள் மற்றும் காணொளிகள் வைத்திருந்ததாக மட்டுமே வழக்குப் பதியப்பட்டுள்ளது.

அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பிலோ அல்லது, ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடனை கொல்ல திட்டமிட்டதாக அவரே கூறியதன் அடிப்படையிலோ பொலிசார் வழக்குப் பதியவில்லை என்றே தெரிய வந்துள்ளது. சம்பவத்தன்று கன்னபொலிஸ் பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு வங்கியின் ஊழியர் ஒருவர், சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு வேன் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அதிரடியாக அந்த வாகனத்தை சோதனையிட்டனர்.

கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த வாகனத்தில், பல எண்ணிக்கையிலான துப்பாக்கிகள், வெடிமருந்துகள், வெடிகுண்டு தயாரிக்க உதவும் புத்தகங்கள் மற்றும் 500,000 டொலர் தொகை என பொலிசாரால் மீட்கப்பட்டது. இதனையடுத்து விசாரணையை முடுக்கிவிட்ட பொலிசார், 19 வயதான அலெக்சாண்டர் ஹில்லெல் ட்ரைஸ்மேன் என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், அந்த நபர் ஜோ பைடன் தொடர்பில் நுணுக்கமாக தகவல் சேகரித்துள்ளதும், கூட்டக்கொலைகள் தொடர்பான தகவல்களை திரட்டியுள்ளதும், இனவெறி சித்தாந்தங்கள் மீது ஈர்ப்பு கொண்டவர் எனவும் தெரிய வந்தது. மட்டுமின்றி, சிறார் தொடர்பான ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்களையும் பொலிசார் அவரிடம் இருந்து மீட்டனர்.

மேலும், மே 3 ஆம் திகதி ஜோ பைடனின் குடியிருப்பு அமைந்துள்ள பகுதிக்கு உட்பட்ட ஒரு உணவகம் வரை சென்று திரும்பியதும் விசாரணையில் தெரிய வந்தது. மட்டுமின்றி தமது அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் மே 16 ஆம் திகதி ஒரு குறிப்பு தயார் செய்துள்ளதும், அதில் ஜோ பைடன் மீது தாக்குதல் தொடுக்க முடிவு செய்துள்ளதும், விசாரணை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.

மேலும் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரையில் ஜோ பைடன் தொடர்பில் அனைத்து தகவல்களையும் அந்த நபர் திரட்டியுள்ளார். தற்போது விசாரணைக் கைதியாக சிறையில் உள்ள ட்ரைஸ்மேன் மீது ஆயுதங்கள் குவியலாக வைத்திருந்தது தொடர்பில் அல்லது தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டது, அதி முக்கியமாக ஜனாதிபதி வேட்பாளரை கொல்ல திட்டமிட்டது உள்ளிட்ட எந்த குற்றத்திற்கும் வழக்குப் பதியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!