விண்வெளியில் நாசா விண்கலம் படைத்த வரலாற்று சாதனை!

சூரியனை பூமியும் மற்ற கிரகங்களும் சுற்றி வருகின்றன. இவை அல்லாமல் சூரியனை விண்கற்களும் சுற்றி வருகின்றன. பாறாங்கல் எனப்படும் கற்கள் மட்டுமன்றி சில கிலோ மீட்டர் நீள அகலம் கொண்ட பெரிய பறக்கும் மலைகளும் இவற்றில் அடங்கும். இவை அனைத்தையும் பொதுவில் அஸ்டிராய்ட் என்று அழைக்கின்றனர். இந்த அஸ்டிராய்டுகளை ஆராய கடந்த சில காலமாக விஞ்ஞானிகள் ஆளில்லா விண்கலங்களை அனுப்பி வருகின்றனர். அடுத்த கட்டமாக இந்த அஸ்டிராய்டுகளிலிருந்து கல்லையும் மண்ணையும் அள்ளி வருவதற்கான முயற்சி இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜப்பானும் அமெரிக்காவும் தனித்தனியே முயற்சியை மேற்கொண்டுள்ளன.

அமெரிக்காவின் நாசா பென்னு எனப்படும் அஸ்டிராய்டை நோக்கி ஒரு ஆளில்லா விண்கலத்தை அனுப்பியுள்ளது. ஆசிரிஸ் ரெக்ஸ் என்னும் பெயர் கொண்ட அந்த விண்கலம் 2016 செப்டம்பரில் பென்னுவிற்கு அனுப்பியது. சமீபத்தில் ஆசிரிஸ் ரெக்ஸ் விண்கலம் 11 அடி நீளமுடைய ரோபோ கை மூலமாக பென்னுவின் வட துருவ கற்களின் மாதிரியை கைப்பற்றியது.இதன் மூலம் எதிர்காலத்தில் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிபிறக்கும் என்று கருதப்படுகிறது.

நாசாவின் விண்கலம் பென்னு என்னும் சிறுகோளின் தரையைத் தட்டிய போது விஞ்ஞானிகள் மகிழ்ச்சியும் பரபரப்பும் அடைந்தனர். பென்னுவின் கற்களில் இருந்து மாதிரியை கைப்பற்றி அந்த விண்கலம் நமது பிரபஞ்சத்தின் ரகசியத்தை பூமிக்கு கொண்டு வர உள்ளது. அது ஒரு அற்புதமான காட்சி நூறு முறைக்கு மேல் அக்காட்சியைப் பார்த்து மகிழ்ந்தேன் என்று மூத்த விஞ்ஞானியும் முதன்மைய ஆய்வாளருமான டான்டே லாரெட்டா தெரிவித்தார்.

பென்னு என்ற சிறுகோள் பூமியை விட்டு 100 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. பென்னு போன்ற சிறுகோள்கள் பிரபஞ்ச கோள்களின் சிதறிய துகள்களாக நான்கரை பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் விண்ணில் காணப்படுகின்றன. பென்னு 1999-ம் ஆண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டதாகும். அதன் நீளம் சுமார் 500 மீட்டர். குறுக்களவு சுமார் 200 மீட்டர்.

பின்னுவில் இருந்து மாதிரியை கைப்பற்றிய பின்னர் விண்கலம் அங்கிருந்து கிளம்பும். ஆசிரிஸ்ரெக்ஸ் விண்கலம் 2023 செப்டம்பரில் பூமிக்குத் திரும்பும். சாம்பிள்கள் அடங்கிய பேழை அமெரிக்காவில் உடா மாகாணத்தில் உள்ள விமானப் படை தளத்தில் பாரசூட் மூலம் மெல்லஇறங்கும். ரியுகு, பென்னு ஆகிய இரண்டும் கரியகப் பொருட்கள் அடங்கிய அஸ்டிராய்டுகள் ஆகும். சூரியனை சுற்றுகையில் இரண்டுமே அவ்வப்போது பூமிக்கு அருகில் வந்து செல்பவை.

அவை பூமிக்கு அருகில் வந்து செல்லும் போது அந்த அஸ்டிராய்டுகளுக்குச் சென்று சாம்பிள்களை சேகரிக்கலாமே என்று கேட்கலாம். அது நடை,முறையில் சாத்தியப்படாத விஷயம். பூமி தனது சுற்றுப்பாதையில் மணிக்கு சுமார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதாகும். பென்னு, ரியுகு அஸ்டிராய்டுகளும் கிட்டத்தட்ட அதே வேகத்தில் பறந்து செல்பவை. எனவே பூமியிலிருந்து செலுத்தப்படும் விண்கலம் அந்த அஸ்டிராய்டுகளில் போய் இறங்குவது சாத்தியமில்லை. எனவே அந்த அஸ்டிராய்டுகளை பின்னாலேயே சென்று துரத்திப் பிடிப்பது தான் சாத்தியமான ஏற்பாடாகும். அந்த ஏற்பாட்டைத் தான் ஜப்பானும் அமெரிக்காவும் பின்பற்றியுள்ளன.

இந்த அஸ்டிராய்டுகளிலிருந்து கல்லையும் மண்ணையும் சேகரித்து வந்து ஆராய்வதன் நோக்கம் என்ன? சூரியனும் பூமி உட்பட கிரகங்களும் சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றின. இவை தோன்றியது குறித்து யூக அடிப்படையில் பல கேள்விகள் உள்ளன. கிரகங்கள் தோன்றிய போதே அஸ்டிராய்டுகளும் தோன்றி விட்டன. அஸ்டிராய்டுகள் தோன்றிய காலத்திலிருந்து பாதிப்பு இல்லாமல் கிட்டத்தட்ட அதே மாதிரியில் உள்ளதாகக் கருதப்படுகிறது. இத்துடன் ஒப்பிட்டால் பூமியில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன.

எனவே அஸ்டிராய்டுகளிலிருந்து கல்லையும் மண்ணையும் எடுத்து வந்து சோதித்தால் பூமியின் தோற்றம், உயிரினத் தோற்றம் ஆகியவை பற்றிய பல கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!