கழிவறையில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த கொரோனா நோயாளி: ஸ்தம்பித்த மருத்துவமனை!

சிவ்ரி டிபி மருத்துவமனை கழிவறைக்கு சென்ற நோயாளி 14 நாட்களுக்கு பின் பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்துக்கு ஊழியர்களின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நோயாளி பலியானது தொடர்பாக விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மும்பை சிவ்ரியில் உள்ள டிபி மருத்துவமனை தற்போது கொரோனா சிகிச்சையளிக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 27 வயது நோயாளி ஒருவர் அங்குள்ள கழிவறையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் 14 நாட்களுக்கு பின் பிணமாக மீட்கப்பட்டது.

இது தொடர்பாக அங்குள்ள மருத்துவமனை ஆவணங்களை ஆய்வுசெய்தபோது இறந்தவர் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி என்பது தெரியவந்தது. அவரது பெயர் சூர்யபான் ஜாதவ் (27) என்பது தெரியவந்தது. அவர் கடந்த 4ம் தேதி கொரோனா வார்டில் இருந்து மாயமானது தெரியவந்தது. ஜாதவ் எந்த ஊரை சேர்ந்தவர், அவரது முகவரி என்ன என்பது பற்றிய விவரம் மருத்துவமனை நிர்வாகத்திடம் இல்லை.

கடந்த 4ம் தேதி மருத்துவமனை கழிவறைக்கு சென்ற அவர் மூச்சுதிணறி இறந்து கிடந்துள்ளார். நோயாளிகளுடன் மருத்துவ ஊழியர்கள் துணைக்கு செல்லாததால் அவர் கழிவறையில் இறந்து கிடந்தது 14 நாட்களுக்கு பின் தெரியவந்துள்ளது. முன்னதாக பல நோயாளிகள் இங்கிருந்து தப்பியோடிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இது தவிர படுக்கையிலேயே மலம்கழிக்கும் தட்டுக்கள் ேபாதுமான அளவுக்கு இல்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில் நோயாளி இறந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. துணை சுகாதார செயல் அலுவலர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி 4 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

14 நாட்களுக்கு பின் மீட்டது ஏன்?

ஜாதவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக அந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ஆனந்தே கூறுகையில் “வழக்கமாக இந்த மருத்துவமனையில் டிபி நோயாளிகள் மாயமாவது உண்டு. ஜாதவ் மாயமாவதற்கு முன்பு அதாவது கடந்த 18ம் தேதி வரை எந்த நோயாளியும் கழிவறையில் துர்நாற்றம் வீசுவதாக கூறவில்லை. தினமும் 3 முறை கழிவறை சுத்தப்படுத்தப்படுகிறது. சில நேரம் கழிவறையை சுத்தம் செய்பவர் அங்கு செல்லும்போது நோயாளிகள் உள்ளே இருந்தால் சுத்தம் செய்யாமல் பின்னர் சென்று சுத்தம் செய்வது உண்டு. அப்படி மூடிக்கிடப்பதாக கருதியதால் 14 நாட்களுக்கு பின் சடலம் மீட்கப்பட்டுள்ளது’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!