இயல்பு நிலைமை பாதிக்காமல் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற முடிவு!

இயல்பு நிலைமை பாதிக்காதவாறு சுகாதார வர்த்தமானி அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்ற வேண்டும் என வடமாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

வடமாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“வடமாகாணத்தின் கொரோனா தொடர்பான கூட்டத்தில் பொதுவாக மாவட்டங்களுடைய நிலைமைகள் ஆராயப்பட்டு அதனடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலவரங்கள் பற்றி ஆராய்ந்து அறியபட்டதோடு. அங்குள்ள தொற்று நிலைமைகளுக்கு ஏற்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டன என்பது பற்றியும் ஆராயப்பட்டது.

மேலும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள சட்ட ரீதியான ஏற்பாடுகளை பொருத்தமான வகையில் அமுல்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. அதே போன்று அந்த சட்டரீதியான ஏற்பாடுகளை பின்பற்றாதவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனைவிட பொதுவாக ஊடகங்கள் பொறுப்புமிக்க வகையிலே கொரோனா தொடர்பான செய்திகளை வெளிப்படுத்த வேண்டும் என கோரப்பட்டது.

போக்குவரத்து நிலைமைகள் மற்றும் ஏனைய இயல்பு நிலைமைகள் பாதிக்காத வண்ணம் சுகாதார நடைமுறை வர்த்தமானி அறிவுறுத்தலை பின்பற்றி சகலரும் நடந்து கொள்ள வேண்டும் என்பது ஒரு தீர்மானமாக இன்றைய தினம் எடுக்கப்பட்டது. வர்த்தகமானி தீர்மானங்களை மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் பட்சத்தில் மாவட்டத்தில் தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும்.

மேலும் பொதுவாக அரசாங்க அலுவலகங்களில் கடமையாற்றுபவர்களுடைய விபரங்களை அவர்களுடைய முகவரிகள் அவர்களின் தொடர்பு இலக்கங்கள் போன்றவற்றை தொகுத்து வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் எந்த பிரதேசத்திலாவது தொற்று ஏற்படும் போது அவர்களை இலகுவாக தனிமைப் படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே இந்த சுகாதார நடைமுறைகள் அனைத்தும் மக்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன எனவே மக்களை அசௌகரிய படுத்துவதற்கான நடைமுறைகள் அல்ல எனவே இதனுடைய விளைவுகளை உணர்ந்த வகையிலே எங்களுடைய மக்கள் தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை இன்றுவரை 226 குடும்பங்களைச் சேர்ந்த 424 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். அத்தோடு 14 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்கள் என குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!