யாழ் மாவட்டத்திற்குள் பிரவேசிப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு : அரசாங்க அதிபர்!

யாழ் மாவட்டத்திற்குள் பிரவேசிக்கும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அவைரும் கட்டாயம் சுகாதாரப் பிரிவில் தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தலிருந்து இன்று விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“முடக்கநிலை நீக்கப்பட்டாலும் குறித்த பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியமாகும்.

யாழ் மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டிருந்த மூன்று கிராமங்கள் இன்று காலையிலிருந்து முடக்கல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணம் மற்றும் ஏனைய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலை காணப்படுகின்றது.

தற்பொழுது யாழ்.மாவட்டத்தில் சுகாதாரப் பிரிவினரால் முடக்கப்பட்ட பிரதேசங்கள் முடக்க நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் கிருமி தொற்று அச்சம் தொடர்ந்து காணப்படுகின்றது.

எனவே குறித்த பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்றுவதன் மூலமே குறித்த பகுதியிலோ அல்லது வேறு பகுதியிலோ தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்க முடியும்.

அத்துடன் முடக்க நிலையிலிருந்து விடுபட்ட கிராமங்களுக்கு மேல் மாகாணம் அல்லது ஏற்கனவே கொரோனா பாதிப்புள்ள அபாய வலயங்களிலிருந்து புதியவர்கள் யாரும் வருகை தந்தால் அவர்கள் கட்டாயமாக சுகாதாரப் பிரிவினரிடம் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்” என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!