ஆண் நண்பனுடன் சேர்ந்து கணவனுக்கு ஆரஞ்சு பழச்சாற்றில் விஷம் கலந்து கொடுத்த பெண்!

அவுஸ்திரேலியாவில் ஆண் நண்பனுடன் சேர்ந்து கணவனுக்கு ஆரஞ்சு பழச்சாற்றில் விஷம் கலந்து கொடுத்த பெண்ணுக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்தவர் சாம் ஆப்ரஹாம், இவரது மனைவி சோபியா சாம் (33), இவர்களுக்கு 4 வயதில் மகன் இருக்கிறான்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசித்து வந்த ஆப்ரஹாம், கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சடலமாக மீட்கப்பட்டார். மாரடைப்பால் ஆப்ரஹாம் இறந்துவிட்டதாக நாடகமாடிய சோபியா, கேரளாவுக்கு சென்று சடங்குகளை செய்தார். இந்நிலையில் பிரேத பரிசோதனையில், ஆப்ரஹாமின் ரத்தம் மற்றும் கல்லீரலில் சையனைடு விஷம் கலந்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து பொலிசார் விசாரணை நடத்தியதில், பத்து மாதங்கள் கழித்து சோபியாவும், அருண் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் சோபியாவுக்கு 22 ஆண்டுகளும், அருணுக்கு 27 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சோபியாவின் டைரி குறிப்புகள் அவுஸ்திரேலியா பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது. அத்துடன் விசாரணையின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை பொலிசார் சோதனை செய்ததும் தெரியவந்துள்ளது.