வடக்கு முதல்வருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு – 29ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பு, வரும் 29 ஆம் நாள் அளிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தம்மை பதவியில் இருந்து நீக்கியது தவறு என்று உத்தரவிடக் கோரி, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, ஜானக டி சில்வா ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்திருந்தது. இந்த மனு மீதான விசாரணைகள் முடிந்து, கடந்த 11ஆம் நாள் தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அன்றைய நாள் நீதியரசர்களில் ஒருவர் வராமையால், தீர்ப்பு, நேற்றைய நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நேற்றும் இந்த தீர்ப்பு அளிக்கப்படவில்லை. வரும், 29ஆம் நாள் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!